Friday, January 13, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும்.

தை மாதப் பிறப்பான (15.1.2012) அன்றைய தினத்தை, உத்தராயன புண்ய காலம் என்பார்கள். சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை 'மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். 

இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் ஸ்ரீசூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! 

இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

சூரியனை ஆராதித்துப் போற்றுகிற பொங்கல் திருநாள், இந்த வருடம் ஞாயிற்றுக் கிழமையன்று வருவது பெரும் பாக்கியம்.

ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம:
ஓம் பாஸ்கராய நம

எனும் மந்திரத்தைச் சொல்லி, 'ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி திநே திநே:  ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷூ தாரித்ர்யம் நைவ ஜாயதே:’ என்கிற வசனப்படி, தினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றைக் கடைப்பிடித்த நம் முன்னோர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு நாமும் வாழ்ந்தால், நம் வாழ்க்கை மட்டுமின்றி நம் சந்ததியினரது வாழ்க்கையும் சிறக்கும்!
'உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்பார்கள். நமக்குத் தேவையான உணவுகளுக் காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் உழவர் பெருமக்களுக்கு இந்த நாளில், மனதார நன்றி செலுத்துவோம்!

No comments:

Post a Comment