Friday, December 30, 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஸ்ரீ சனிஸ்வர பகவான்.
 நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக, உதயாதி நாழிகை 2.17-க்கு நேத்திரமும், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில், புதன் ஓரையில், சரியாக காலை மணி 6.55-க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி நடந்தது.

16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து, தன் ஆதிக்கத்தைச் செலுத்துவார். இடையில்... மார்ச் 26, 2012 முதல் செப்டம்பர் 11, 2012 வரை சனி பகவான் வக்ரகதியில் கன்னி ராசிக்குள் சென்று திரும்புகிறார்.

மேஷம் :
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளை தந்த சனிபகவான், வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி காலத்தில் வலுவடைந்து, 7-ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். இருவருக்கும் சண்டை, சச்சரவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள்.

மாதவிடாய்க் கோளாறினால்,  ஆரோக்கியம் பாதிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.


சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமரும் காலகட்டத்தில் திடீர் பணவரவு, வாகன யோகம் உண்டாகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும் காலகட்டத்தில் சற்றே உடல் நிலை பாதிக்கும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலகட்டத்தில் எதிலும் வெற்றி உண்டாகும். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்லும்போது செல்வம் பெருகும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணரும் காலம்.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து இதுவரை பல வகைகளிலும் அலைக்கழித்த சனிபகவான், வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி காலத்தில் 6-ம் வீட்டில் அமர்வதால்... தொட்ட தெல்லாம் துலங்கும்.


அடிவயிற்றில் வலி இருந்ததே! அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்கியம் கூடும்.பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடாளுபவர்கள் அறிமுக மாவார்கள்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமரும் காலத்தில்... பிள்ளைகளால் டென்ஷன், உறவினர் பகை வந்து நீங்கும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும் காலகட்டத்தில் கௌரவம் உயரும். வீடு, மனை வாங்குவீர்கள். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது பணப்பற்றாக்குறை ஏற்படும்.

பரிகாரம்: திருநெல்வேலி, தென்திருப் பேரை ஸ்ரீகைலாசநாதரை ஆயில்யம் நட்சத்திர நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தரும் காலம்.

மிதுனம் :

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து பல இன்னல்களை இதுவரை தந்து வந்த சனிபகவான், இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் 5-ம் வீட்டில் அமர்வதால்... உங்களின் தயக்கம், பயம் நீங்கி, மனவலிமை கூடும். பூர்விக சொத்து கைக்கு வரும்.

கணவருடன் உரிமையாக பேசி, கூடா பழக்க வழக்கங்களிலிருந்து அவரை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சனிபகவான் வக்ரமாகும் காலத்தில், உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத்தில் பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிட்டும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது, சொத்து வாங்குவீர்கள்.  குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்லும்போது மாமனார், மாமியார் மதிப்பார்கள்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன்கோயில் அருகிலுள்ள திருப்புன்கூர், ஸ்ரீசிவலோக நாதரை, கேட்டை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

தடைகளை உடைபட வைப்பதுடன் அதிரடி முன்னேற்றங்களை தரும் காலம்.

 கடகம் :

இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான், இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால், ஓரளவு நிம்மதியே தருவார். உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் 8-ம் வீட்டுக்கு அதிபதியாக அமைவதால், கணவரின் கை ஓங்கும்.

அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் எடுத்த வேலையை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும்.

சனி பகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமரும் காலகட்டத்தில் புதுவீடு கட்டி குடி புகுவீர்கள். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலத்தில் வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத்தில் திடீர் பயணங்கள் வரும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் செல்லும்போது, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

பரிகாரம்: திருநெல்வேலி, பாபநாசம், ஸ்ரீபாபநாச நாதரை மூலம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

முதல் முயற்சியில் முடிக்காமல் போனாலும், இடைவிடாத உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.

சிம்மம் :

இதுவரை பாதச்சனியாக அமர்ந்து உங்களை நாலாவிதங்களிலும் பாடாய்ப்படுத்திய சனிபகவான், சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறு வீர்கள்.

நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், ஆரோக்கியம் அடைவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச்சனியாக அமரும் காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு, உடல் நல பாதிப்புகள் வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத் தில் குடும்பத்தில் நல்லது நடக்கும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலத்தில் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலத்தில் உங்கள் செல்வாக்கு உச்சத்தை அடையும்

பரிகாரம்: வேதாரண்யம், ஸ்ரீவேத வனேஸ்வரரை புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

அதிரடி வெற்றிகளையும், அடிப்படை வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தரும் காலம்.
கன்னி :

இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்கள் நிம்மதியை சீர்குலைத்த சனிபகவான், சனிப்பெயர்ச்சி  காலகட்டத்தில் உங்கள் ராசியைவிட்டு விலகி, பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

எப்போதும் தலைவலி, வயிற்று  வலி என வலி பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே! இனி உடல் நிலை சீராகும். கணவர் எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவித கவலையில் ஆழ்ந்திருந்தாரே! இனி சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார். என்றாலும், பாதச்சனியாக வருவதால் கணவருடன் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்கின்ற காலகட்டத்தில் நம்பிக்கையின்மை ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில், சனி பகவான் செல்லும்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலங்களில் நினைத்த காரியம் நிறைவேறும். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்: திருவையாறு, திருப்பழனம், ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை சதய நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

புது முயற்சிகளில் வெற்றியும், தோற்றப் பொலிவும், ஆரோக்கியமும் வந்து சேரும் காலம்.
துலாம் :

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து சேமிக்க முடியாதபடி செலவுகளைத் தந்த சனிபகவான், இப்போது ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். அதற்காக அஞ்சத் தேவையில்லை. சனிபகவான் உங்களுக்கு சுகப் பூர்வ புண்யாதிபதி யாக வருவதால் நல்லதையே செய்வார்.கணவரின் பாராமுகம் மாறி, பாசமாகப் பேசுவார். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் கடன் பிரச்னை, வீண் விரயம், தூக்கமின்மை வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில், அரசால் ஆதாயம் உண்டு. ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசிக்கும் காலத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும்.

பரிகாரம்: கும்பகோணம், தேரெழுந்  தூரில் வீற்றிருக்கும் தேவாதிராஜப் பெருமாள்- ஸ்ரீசெங்கமலவள்ளித் தாயாரை ரோகிணி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.
ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த உங்களுக்கு பணப்புழக்கம் மற்றும் மகிழ்ச்சி  தரும் காலம். 
விருச்சிகம் :

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களின் புகழ், கௌரவத்தை உயர்த்திய சனிபகவான்,  இனி விரயச் சனி, ஏழரைச் சனியின் தொடக்கம் என்று மாறப் போகிறார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி பகவான், ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சிக்கனமாக இருக்கப் பழங்குங்கள்.

'ஏழரைச் சனி தொடங்குகிறதே!’ என்று கலங்க வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான், மன இறுக்கத்தையும், பயத்தையும் தந்தாரே! ஆனால், தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் தொட்ட காரியம் துலங்கும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில், சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது, வேற்று மதத்தவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளை பூரம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

அனுபவபூர்வமான பேச்சால் வெற்றியும், வளைந்து கொடுக்கும் போக்கால் வளர்ச்சியும் கிடைக்கும் காலம்.

தனுசு
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் அவமானங்களையும், முயற்சிகளில் இடையூறுகளையும் தந்த சனிபகவான், இப்போது லாப வீட்டில் அமர்கிறார். கடினமாக உழைத்தும் அதற்கான பலனேதுமில்லாமல் போனதே! அடுத்தடுத்து செலவுகளாலும், வேலைச்சுமையாலும் அவதிப்பட்டீர் களே! இந்தத் தொல்லைகள் நீங்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மாமனார், மாமியார் மெச்சுவார்கள். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கு வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும்.
சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் வீண் டென்ஷன், மறைமுக அவமானம் ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும்போது வெளிநாட்டில்இருக்கும் தோழிகளால் திடீர் திருப்பம் உண்டாகும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசிக்கும்போது சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
பரிகாரம்: மயிலாடுதுறை, திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதரை உத்திரம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.
சுறுசுறுப்போடு... வசதி, வாய்ப்புகளையும் தரும் காலம்.
மகரம் :

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து, இதுநாள் வரை தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாற்றங்களைத் தந்து, சேமிப்பு களையும் கரைத்த சனிபகவான், இப்போது 10-ம் வீட்டில் அமர்வதால் பதவிகளும், கௌரவமும் தேடி வரும். சனிபகவான் உச்சமாகி யோகாதிபதி யான சுக்கிரனின் வீட்டில் அமர்வதால்... இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள்.

கணவரின் கோபம் குறையும். உங்களின் பெருந்தன்மையை இனிமேல் புரிந்து கொள்வார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.  

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஒரு வித படபடப்பு வரும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும்போது வயிற்று வலி, முதுகு வலி, முழங்கால் வலி வந்து நீங்கும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலகட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குரு பகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டங்களில் மனோபலம் அதிகரிக்கும்.

பரிகாரம்: விருத்தாசலம், விருத்த  கிரீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஆழத்து விநாயகரை சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

முடங்கிக் கிடந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் செயற்கரிய செயல்களையும் செய்ய வைக்கும் காலம்.

கும்பம் :
இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலற வைத்து, அழ வைத்த சனிபகவான், இப்போது 9-ம் வீட்டில் அமர்வதால்... இனி எல்லா வற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். சாதிக்க வேண்டுமென்ற துணிச்சல் வரும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். பழைய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் விரக்தி, பதற்றம், ஏமாற்றம் வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது திருமணத் தடை நீங்கும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
பரிகாரம்: மாமல்லபுரம் அருகிலுள்ள திருவிடந்தை ஸ்ரீலக்ஷ்மி வராகப் பெருமாளை பூச நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.  
கவலையும், கண்ணீருமாக இருந்த உங்களுக்கு... நிம்மதியும் நிதியும் வந்து சேரும் காலம்.

மீனம் :
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அவ்வப்போது ஆரோக்கிய குறைவைத் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான், இப்போது 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தமான முயற்சிகள் தாமதமாகி முடியும்.
சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் உங்களுக்கும், கணவருக்கும் உடல் நலக் கோளாறுகள் வரும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது... கல்யாண முயற்சிகள் கைகூடும்.
பரிகாரம்: சுவாமிமலை அருகிலுள்ள திருஆதனூர் ஸ்ரீஆண்டளக்குமையன் பெருமாளை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்.

 

Saturday, December 17, 2011

ஏழரைச் சனி என்னதான் செய்யும்?

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை மங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று:

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.


குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.


மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.


ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.


இரண்டாவது சுற்று:

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?


‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள்.


அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?
வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’  என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான்.

‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.
கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனிபகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.


மூன்றாவது சுற்று:

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். 

இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். 

ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.
ஜோதிடரத்னா.கே.பி.வித்யாதரன்.

Saturday, December 10, 2011

சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வர பகவான்.

நவகிரகங்களுள் மிகவும் சக்தியும், பலமும் வாய்ந்தவராக கருதப்படுபவர் சனிபகவான். பற்பல சிவன் கோயில்களில் இவருக்குத் தனி சந்நதிகள் இருந்தாலும், திருநள்ளாரில் இருக்கும் தர்ப்பராண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு திசையில், மகரம்., கும்பம் ராசிகளின் அதிபனாக காக்கை வாகனத்தோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சாந்தி, பொறுமை, கருணை ஆகிய மேலான குணங்களைக் கொண்டு ஆதிமூர்த்தியாம் அந்த திருநள்ளாராரை தியானிக்கும் பக்தர்களுக்கு தன்னால் வந்த, அதாவது சனி தோஷத்தால் வந்த நோய், பொருள் விரயம், பேராபத்து, சஞ்சலம், துக்கம், விரக்தி, சோம்பல், தொழில் இடையூறு என அனைத்து சோதனைகளையும் நீக்கும் நீதி அரசராக கலியுகத்தில் சனி ஆட்சி செய்யும் இடம் இந்த தர்ப்பைக் காடு என்ற திருநள்ளாறு.

இங்கு உள்ள மூலவர் ஆதிமூர்த்தி நள்ளாரார்  தர்ப்பராண்யேஸ்வரர், தானே உதித்த சுயம்பு மூர்த்தி. இது சப்தவிடங்க சிவ தலங்களுள் மிகவும் போற்றப்படுவது. அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற மேலோர்களால் பாடப்பட்ட தலம். சிவபெருமான் உன்மத்த நடனம் செய்யும் தலம். நூலாறு, வஞ்சியாறு என இரண்டு நதிகள் வடபுறமும், தெற்கே அரசலாறு ஓட இடையே சனி பகவான் கருணையே வடிவாக நின்ற கோலத்தில் அருள் பரிபாலிக்கின்றார்.

மணி என்ன? என்றால் ஏழரை என்று நம் முன்னோர்கள் சொன்னது இல்லை. போடி சனியனே என்று மனைவியை சொன்னால் ஒருவாரம் சோறு கிடையாது. அப்படிப்பட்ட குரூர குணங்கொண்ட சனிபகவான் கருணை, சாந்தம், பொறுமை, மகிழ்ச்சி பொங்க வீற்றிருப்பது இங்குதான்.

ஏன்? நள மகாராஜன் என்ற நிஷத நாட்டு சக்ரவர்த்தி, தன் அழகு, நாடு, ஆஸ்தி, மனைவி அனைத்தையும் இழந்து, மடையனாக மாமனின் அரண்மனையிலேயே சமையல் வேலை என்னும் சேவகம் புரிந்து வந்தான். ஒருமுறை நாரதர் அவன் கனவில் தோன்றி, நள்ளாரார் என்னும் சிவனைத் துதிக்கச் சொல்லி, பின் சனி பகவானை வணங்கும் முறையையும், ஸ்தோத்திரத்தையும் உபதேசித்து அருளினார். நளச் சக்ரவர்த்தியும் நள்ளாறு ஈசனுக்கு, பால், தயிர், பழரசம், சந்தனக் குழம்பு, பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து சாதத்தில் நல்லெண்ணெயும், எள் பொடியும் கலந்து நைவேத்யம் செய்தார். இவற்றை எல்லாம் சனி பகவான் ஒரு தூணில் மறைந்து நின்று கண்டு ரசிக்க, போகமார்த்த பூண்முலையாள் நாயகனாம் சிவன், பிரசன்னமாகி, நளன் வாட்டம் போக்கினார்.

பின் சனி பகவானை நோக்கி, ‘இங்கே நில். இன்று தொட்டு உனக்கும் ஈஸ்வரன் என்ற பெயர் சேரட்டும் என்றார். அன்று முதல் சனி பகவான், சனீஸ்வரன் ஆனார்.

சூரிய குமாரன் ஆனதால், வாரத்தில் வரும் முதல்நாள் சூரியனுக்கும், கடைசி நாள் சனிக்கும் என்று வகுத்தார்கள். சனிக்கு கருமை உடல். எனவே, காக்கை வாகனம். கறுப்பு வஸ்திரம். கருப்பு தான்யமாக எள். எள் எண்ணெய் அவர் விரும்புவது. நீலக் குவளை மலர், வன்னி இலை, புளு சபையர் என்ற நீலக்கல் என அனைத்தும் சனீஸ்வரனுக்கு நளன் படைத்து வணங்கினார். அவரை வணங்கும் முன், நளமகாராஜன் ஒரு குளத்தை வெட்டினார். இதுவே நள தீர்த்தம் என இன்றும் போற்றப்படுகிறது. நள தீர்த்தத்தில் எள் எண்ணெய் தேய்த்து நீராடிய பின், பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதை சனீஸ்வரர் நேசிக்கிறார்.

இப்படி செய்வதினால் எப்படிப்பட்ட தோஷமும், நவகிரஹ கோளாறும் நீங்கும் என்கிறது நாடி. சனிக்கிழமைகளில் ஒரு பொழுது உணவு உண்ணாது விரதம் இருப்பது ஐஸ்வர்யம், ஆரோக்கியம், ஆயுள் எல்லாம் விருத்தி அடையும் என்கிறார் அகஸ்தியர். திருநள்ளார் கோயிலை நளச் சக்ரவர்த்தி கட்டியபின், 7ம் நூற்றாண்டு தொட்டு பற்பல மன்னர்கள் கோயிலை விரிவுபடுத்தினர்.
நாடியில் திருநள்ளார், ‘நள ஈஸ்வரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பெயர்ச்சி ஏற்படும்.

அப்படி சனி பெயர்ச்சி அன்று உதயாதி வேளையில் கோதை நாச்சியாரால் ஆக்கப்பட்ட திருப்பாவையும் மற்றும் திருவெம்பாவையும் பாராயணம் செய்யப்படுகிறது. ஏனெனில், சனி பகவானை, ‘ஸ்ரீவிஷ்ணு ப்ரியாயை நம’ என்று நாரதர் போற்றுகிறார். நள மகாராஜன் சொன்ன சனி பகவான் ஸ்தோத்திரத்தை ஒரு நாளைக்கு 107 முறை (108 அல்ல),  காலைவேளையில் ஜபித்து வந்தால் கண் திருஷ்டி அகலும். சனி பகவானின் அதாவது சனி ஸ்வரனின் பெரிய அருள் சித்திக்கும்:

சனி பகவான் ஸ்தோத்திரம்:
‘ஓம் அங் ஹ்ரீம் ஸ்ரீங் சங்
சநைஸ்வராய நம: ஓம்’


சனீஸ்வரனின் தாயார் சாயா தேவி. எனவே சனி பகவானின் அர்த்தசாம பூஜையை பக்தர்கள் காணக் கூடாது என்பார்கள். தாயார் சாயாதேவி, தனியாக மகனை தரிசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவானின் பிரசாதத்தையோ, சிவபெருமானின் பிரசாதத்தையோ வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டாலும், திருநள்ளாறு சனீஸ்வர பிரசாதத்தை வீட்டிற்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர் சித்தர்களும் ரிஷிகளும். புரட்டாசி மாத பௌர்ணமி பூஜையும், மகாசிவராத்திரி பூஜையும், சனி பெயர்ச்சி பூஜையும் சாலச் சிறந்தவை. இந்த காலங்களில் இங்கு தங்கி வழிபட்டால், முடியாதது ஒன்றும் இல்லை. எதையும் சாதிக்கலாம் என்கிறார் அகஸ்தியர். இங்குள்ள கலிதீர்த்த விநாயகரைத்தான் முதலில் தொழ வேண்டும் என்பது மரபு.

‘சத்தியம் ஓதுவோம் கேளீர் பாருக்குள்ளே ஏதும் சாதிக்கலாம் தர்ப்யராண்யத்துறை மந்தனாரை மகிமையால் பூஜிக்கவே, 
குட்டமும் நட்டமுந்தீரும். இதய பீடை தவிடு பொடியாகும்.
பட்ட துயரெலாம் நீராகும். சனி யவனால் மேன்மை 
யெல்லாஞ் சித்திக்க காண்பீரே’‘எப்பாவமும் போக்குவான் 
வழிக்கு துணையாய் இருப்பான் வழக்கின் போக்கை மாற்றுவான் 
வாழ்வில் சொல்லொணா மேன்மை தருவான்
சனி என்னும் இவ்வீசன் குடிகொளும் தர்ப்பரான்யத்தே யிருந்து’ 
‘மரகத விடங்கடனால் உன் விதி மாறும் பாரு
திண்ணமாய் சொன்னோம் சோதித்து பாரீர்’ 
என்று பலவாறாக அகஸ்தியர் திருநள்ளார் சனீஸ்வரன்
பெருமையைப் பேசுகிறார்.

Monday, December 5, 2011

சுகபோக வாழ்வு அருளும் சுக்கிர பகவான்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்ப, துன்பங்கள், ஏற்ற, இறக்கங்கள், லாப, நஷ்டங்கள் மாறி மாறி வருகிறது. இது  இயற்கையின் நியதி என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணிய பலமே காரணமாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்கு தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக திசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. 

பெரும்பாலும் எல்லாரும் எதிர்பார்ப்பது, ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி.

தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக் கூடியதே. எல்லா வகைகளிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்று போற்றப்படுகிறார். தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திர காரகன். அதாவது வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய திசா காலமான 20 வருடங்கள் மிகப் பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் நீசம், 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.

ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகங்கள் யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுக வாழ்க்கை கிட்டும்.சுக்கிரன் பலம் பெற்று இருந்தாலும் பலம் குறைந்து இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். 


வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மன், அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். 
பவுர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். 
ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். 
கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர ஸ்தலம். அங்கு தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார் சுக்கிர பகவான். 
இவரை வழிபட்டால் எந்த வகையான திருமண தடைகளும் நீங்கும். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று சேர்வார்கள்.

கணவன் & மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்துவைத்து அவர்களிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடிய திருத்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. 

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் என்ற கோயில் சுக்கிரனுக்கு உரிய ஸ்தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 
வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

Monday, November 28, 2011

பெண்களுக்கு ஐயப்பன் அருள் எவ்வாறு கிடைக்கிறது?

எந்தக் கோவிலாக இருந்தாலும் அந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவனின் புராண இதிகாச வரலாறு அடிப்படையில் தான் அந்த இறைவனுக்குரிய வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன. 

சில தலங்களில் துளசி இல்லை; வைணவக் கோவில்களில் திருநீறு நுழைவதில்லை. ஒவ்வொரு இறைவனுக்கும் தனித் தனி வழிபாட்டுப் பூக்கள் உண்டு; வழிபாட்டு முறைகளும் உண்டு. இந்த இறைவர்களை வணங்கும் பக்தர்களுக்கும் தனித்தனி அனுஷ்டானங்களும் உண்டு. 

இறைவழிபாட்டில் காணும் இந்த வேறுபாடுகளை யாரும் காரணம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் இவைகள் கற்பிக்கப்பட்ட காரணங்கள் அன்று. இறைவனே விரும்பி ஏற்கும் வழிபாட்டு முறைகள் ; அனுஷ்டானங்கள்.

 சபரிமலையில் குடிகொண்டுள்ள  ஐயப்பனுக்கும் தனியான அனுஷ்டானங்களும் வழிபாட்டு முறைகளும் அமைந்திருப்பது வரலாற்றுப் பின்னணியோடு அமைந்த புனிதமான ஒன்றாகும்.  ஐயப்பன் பரிபூரண பிரம்மச்சரியத்தை கைக்கொண்டு அதையே தனித் தத்துவமாக்கி, அந்தத் தத்துவத்தின் விளக்கமாகச் சபரி மலையில் விளங்கிக் கொண்டிருப்பவர். 

பிரமச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு அருள் பாலிக்க மறுக்கும் கடவுள் என்று அர்த்தம் ஆகாது. பூரண பிரம்மச்சரிய நிலையில் தவத்தில் ஆழ்ந்திருக்கும் ஐயன் எத்தனையோ விதங்களில் பெண்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அவர் நோக்கில் உலகப் பெண்கள் அனைவரும் மஞ்சமாதாக்கள். எனவே பெண்களின் மஞ்சள் குங்குமத்திற்கும் மாங்கல்ய பலத்திற்கும்  ஐயப்பன் காவலனாக அமைந்துள்ளார்.

ஐயப்பன் வழிபாட்டில் பெண்கள் அவர் சன்னிதானத்தை நேரிடையாகக் கண்டு, பரிபூரணக் காட்சியில் திளைத்து, அருள் பெரும் நிலை இல்லாதிருப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகாது. ஐயப்ப வழிபாட்டுத் தத்துவத்தை முழுமைப்படுத்தும் முறையில் மேற்கொள்ளும் புனிதப்பயணத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றேயாகும். எனவே பெண்கள் வரக்கூடாது என்பது தடை செய்யப்பட்டதன்று; தத்துவமாக்கப்பட்ட ஒன்று. 

சபரிமலைக்குச் செல்லும் சாமிமார்கள் ஒரு மண்டலம் தவ வாழ்க்கையில் விரதங்களை மேற்கொண்டுள்ளார்கள். தாயுடன் இருக்கும் காலத்தில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கனிவு, பாசம் பற்று இவையனைத்தும் திருமணத்திற்குப் பின்பு மனைவிடம் பெறமுடிகிறது. பெண்களின் இந்தத் தாய்மைப் பண்புகளை நினைத்து நன்கு பாராட்டும் வாய்ப்பு இந்த விரதகாலத்தில் ஆண்களுக்குக் கிடைக்கிறது. எல்லாப் பெண்களையும் தாய்மைப் பண்பில் கருதும் மேலான காலம் இது. மாளிகைபுரம் என்று மரியாதையாக மட்டுமல்லாமல் புனிதமான தெய்வநிலையிலும் அவர்களை அழைக்கிறார்கள். எனவே ஐயப்பன் விரதகாலங்களில் வீட்டில் கண் கூடாகக் காணுத் தெய்வங்கள் பெண்களே.

இந்தப் பெண்களுக்கு  ஐயப்பன் அருள் எவ்வாறு கிடைக்கிறது? அவர்களும் ஆண்களைப் போன்று மலைக்குச் சென்று ஐயனைக் காணாத நிலையில் அவன் அருள் கிட்டிவிடுமா? இது நியாயமான கேள்வி. ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவத்தில் ஆண்கள் மலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் முன்னரே ஐயன் அருள் பெண்களுக்குத்தான் முதலில் கிடைக்கிறது. விரதம் மேற்கொள்ளுங் காலங்களில் சாமிமார்கள் ஒவ்வொருவரும் ஐயப்பனாகவே ஆகிவிடுகிறார்கள். விரதகாலங்களில் பெண்கள் செய்யும் திருத்தொண்டுகள் அனைத்தும் குடும்பத்திலுள்ள ஒருவருக்குச் செய்யும் நடைமுறைச் செயல்களாக அமையவில்லை.  ஐயப்பனுக்கே அவர்கள் திருத்தொண்டுகள் ஆற்றும் பெரு வாய்ப்பு பெண்களுக்கே கிடைக்கிறது. 

சபரிமலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் சாமியார்களுக்கு முன்னதாகவே அவர்களுக்குச் செய்யும் திருத்தொண்டுகளால் ஒவ்வொரு நாளும் விளக்கேற்றும் அருஞ்செயல்களால் எல்லாவற்றிற்கும் மேலாக விரதம் பூரணமடைய ஒத்துழைப்புகளைத் தருகின்ற புனித எண்ணங்களால் ஐயப்பனின் அருள் ஆசிகளைப் பெண்கள் முன்னதாகவே பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

இந்த நடைமுறைத் தத்துவங்களே ஐயப்ப வழிபாட்டில் இடம் பெற்றுவிட்ட படியால் பெண்கள் வெகு தூரத்தில் சிரமான நிலையில்- கடினமான பாதைகளில்- காட்டில்-மலையில்-கடந்து சென்று இறைவனைக் காணவேண்டியதில்லை. 

மற்ற வழிபாட்டில் காணப்படும் வழிபாட்டு முறைகளைவிட  ஐயப்ப வழிபாட்டு முறைகள் தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. உலக மாயைகளில் சிக்கித் திணறுவோர் மனஅடக்கம். புலன் அடக்கம் இவற்றிற்கான பயிற்சியில் ஈடுகொண்டு வெற்றி பெற்று, இந்த அடக்கங்களின் தத்துவமாய் மலையில் இருப்பவனைக் காணுவது ஐயப்ப வழிபாட்டின் சிறப்பான விஷயம். 

பெண்கள் இங்கிருந்தபடியே மன அடக்கம், புலனடக்கம் பெற்று ஐயப்ப சுவாமிமார்களுக்கு சேவை புரிந்து ஐயப்பனின்  அருள் பெறுகின்றனர். ஆனால் ஆண்கள் இதை விரதமாக கடைப்பிடித்து சபரிமலை சென்று இறைவனை காண்கின்றனர். இந்த எண்ணத்தில்தான் பரம்பரை பரம்பரையாக ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே செல்வது வழக்கமாக உள்ளது.

இவை தவிர-

1. சன்னதியிலும், சுற்றுப்புறத்திலும் பெண்களுக்கென்று தனி வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.

2. விரதமிருப்பவர்கள் பெரியபாதையின் வழியாகச் சென்று வழிபாடு செய்வதே முறையாகவிருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் நடந்து செல்ல வேண்டும். பெண்கள் காடுகளினூடே இரண்டு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளுவது கடினமான ஒன்றாகும்.

3. கடுங்குளிர், மழை இத்தகைய சூழ்நிலைகள் அனைவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. குளிப்பது தூங்குவது முதலிய அனைத்துச் செயல்களும் தனித்துச் செய்யும் வாய்ப்பில்லை.

4. சாமியைத் தவிர வேறு நினைவொன்றும் மலையில் வருவதில்லை வரவும் கூடாது. சில நேரங்களில் ஆண்களது மனம் பக்குவமடையாத நிலையில் தங்களின் பிரம்மசரிய விரதங்களுக்குத் தடைகள் வரலாம். இத்தடைகள் மனத்தளவிலும் வருதல் கூடாது.

5. எதிர்பாராத நிலையிலும் காலந் தவறியும் பெண்களின் உடல் இயற்கை மாற்றத்தால் அசுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
இவற்றையும் மனதில் கொள்ளவேண்டும்.

இவையெல்லாம் தெரிந்துதான் பெரியோர்கள் ஐயப்ப வழிபாட்டில் பெண்கள் மலைக்கு வந்து சிரமப்படுவதைத் தவிர்த்து வைத்திருந்தார்கள்.

எனவே ஒன்பது வயதிற்கு உட்பட்ட, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கோயிலுக்கு வந்து தரிசிப்பதே முறையான வழிபாடாகும். நடைபாதைக் கடைகளில் இளம்பெண்கள் வியாபாரம் செய்வதையும் தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட கடைகளுக்குச் செல்வதைச் சாமிமார்கள் தவிர்ப்பதைத் தெரிந்தால் வியாபாரிகள் இந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள்.

ஐயப்ப வழிபாட்டில் வழிவழியாக நம் பெரியோர்கள் கடைபிடித்து வந்த விரதமுறைகளையே நாமும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நம் வசதிக்காக, வாய்ப்பிற்காக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்கள் மாசுபடத் தொடங்கி விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Sunday, October 30, 2011

எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே போற்றி.போற்றி.

இன்று 31.10.11 சூரனை சுப்ரமண்யசுவாமி வதம் செய்த நாள். தீவினை போக்கி நன்மையை பெருக்க, இந்த ஸ்லோகத்தை தினம், சொல்லிக் கொண்டேஇருக்கலாம்.

ஸிந்தூராருணமிந்து காந்தி வதனம்  கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர்   விபூஷிததனும்  ஸ்வர்காதி  ஸௌக்யப்ரதம் அம்போஜாபய  சக்திகுக்குடதரம்   ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்


 பொருள்: 
சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். 

சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். 

தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். 

சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். 

தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். 

உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.

Tuesday, October 25, 2011

சத்தியம் தவறாத உத்தமன்

 அரிச்சந்திரனை, "பொய் பேசுபவன்' என்று நிரூபணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், விசுவாமித்திரர், அரிச்சந்திரனைத் தொடர்கிறார்.
 

கானகத்தின் வழியே செல்கின்றனர். இரவு நேரம் நெருங்குகிறது. ஒரு புறம் பசி, தாகம், இந்த நிலையில் அரிச்சந்திரன் களைப்பு மேலீட்டால், சிறிது கண்ணயர்கிறான்.
 

இதை அறிந்த விசுவாமித்திரமுனிவர், அரிச்சந்திரனைப் பார்த்து, "என்ன தூக்கமா?' என்று கேட்டார். அதற்கு மிகப் பணிவாக, "ஆம், சிறிது கண்ணயர்ந்து விட்டேன். மன்னித்தருள்க...' என்று வேண்டுகிறான் அரிச்சந்திரன்..
 

இந்த இடத்தில், நாம் ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். உலகில், மக்கள் அனைவரும், இம்மாதிரி களைப்பு, அசதி காரணமாக, ஒரு குட்டித் தூக்கம் போடும் போது, "என்ன, தூக்கமா?' என்று நாம் கேட்டால், 

"இல்லையே... விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!' என்று தான் கூறுவர்.

இது நாம், நம்மை அறியாமல் சொல்லும் பொய் 

ஆனால், அரிச்சந்திரன் வாய் தவறிக் கூட பொய் சொல்லவில்லை.

எந்த நிலையில் இருந்தாலும் அதில் இருந்து விலகாது, நிலைத்து நிற்க வேண்டும்.


Friday, October 7, 2011

திருப்பதி-திருமலை அபூர்வமான தகவல்கள்.


திருமலையில் குடிகொண்டு இருக்கும், திருப்பதி வெங்கடாசலபதிக்கு சாத்தப்படும் மேலங்கி, 21 அடி நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட விசேஷ உடை. பட்டு பீதாம்பரம் என்று அழைக்கப்படும் இந்த வஸ்திரம், எந்த கடையிலும் கிடைக்காது; கோவிலில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை, 12 ஆயிரத்து, 500 ரூபாய்.

இந்தப் பணத்தை கோவில் அலுவலகத்தில் கட்டி விட்டால், உங்கள் சார்பில் வஸ்திரம், வெங்கடாசலபதிக்கு சாத்தப்படும். பணம் கட்டிவிட்டு வரிசையில் காத்திருந்தீர்கள் என்றால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களால் வழங்கப்பட்ட வஸ்திரத்தை, பெருமாள் ஏற்றுக் கொள்ளலாம்.

திருமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு லட்டு, பொங்கல், புளி சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, பாதாம் கேசரி, அதிரசம் உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் சுடச்சுடவும், சுவையாகவும் பிரசாதமாக வழங்கப்படும். 

மூலவர் வெங்கடா சலபதிக்கு, அன்றாடம் வாங்கப்படும் புதிய மண்சட்டியில் தயார் செய்யப்படும் தயிர் சாதம் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

மூன்று ஆயிரம் அடி உயர மலையில், குளிர் பிரதேசத்தில், அதிகாலை, 4:00 மணிக்கு குளிர்ந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டாலும், அபிஷேகம் முடிந்த பிறகு பெருமாளுக்கு ஏற்படும் வியர்வையை பீதாம்பரத்தால் துடைத்து எடுப்பர்.

பெரும்பாலான கோவில்களில் பகல், 12:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நடை அடைக்கப்படும். பிறகு இரவு, 10:00 மணியளவில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தரிசனம் நடைபெறும். இடைப்பட்ட நேரத்தில் சுவாமியோ, அம்பாளோ ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்; ஆனால், வெங்கடாசலபதியைப் பொறுத்தவரை ரொம்ப பிசி. 

காலை, 3:30 மணிக்கு பக்தர்களை பார்க்க ஆரம்பித்தால், பின்னிரவு, 3:00 மணி வரை, "நான்-ஸ்டாப்பாக' அருள்பாலிக்கிறார். ஒரு நாளைக்கு மொத்தமே, அரை மணி நேரம்தான் அவருக்கு ஓய்வு. இவ்வளவு கடினமாக பெருமாள் உழைத்தாலும், விழா நாட்களில் அவரை பார்க்க ஒரு வாரத்திற்கும் கூடுதலாகி விடுகிறது.

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,நேபாளத் திலிருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து மேலும் சில வாசனை திரவியங்கள் என்று, உலகம் முழுவதிலும் இருந்து பெருமாளுக்காக, பக்தர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவை எல்லாம் அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும். 

இந்த அபிஷேக நீர், கோவில் அருகில் உள்ள புஷ்கரணி எனப்படும் புனிதநீர் குளத்தில் விடப்படும். இந்த புனிதநீரீல் நீராட, வருடத்திற்கு ஒரு முறை பெருமாள் எழுந்தருளுவார். அந்த விழா, நீராட்டு விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம், பெருமாளுடன் நீராட பல லட்சம் பக்தர்கள் கூடுவர்.

திருப்பதி திருமலையில் உள்ள மூலவர் வெங்கடாசலபதி அணிந்திருக்கும் தங்க, வைர, வைடூரிய நகைகளுக்கு விலை மதிப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர் அணிந்திருக்கும் காசு மாலை மட்டுமே, 12 கிலோ எடை. இதை அணிவிக்க மூன்று அர்ச்சகர்கள் தேவைப்படுவர். 

இது தவிர பச்சை மரகதம், மிக, மிக அபூர்வமான நீலக்கல் இவைகளை எல்லாம் வரிசையில், மணிக் கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ காத்திருந்து போய் பார்த்தால்தான் பார்க்க முடியும். அதுவும் அந்த, "ஜருகண்டி... ஜருகண்டி...' தள்ளிவிடலில் இதை எல்லாம் கவனித்து பார்க்க முடியாது.

உற்சவரான மலையப்பசுவாமி இந்த நகைகளை எல்லாம் அணிந்து, வருடத்தில் ஒரு நாள் கோவிலின் மாடவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வலம் வருவார். பிரம்மோற்சவ விழா நாட்களில் ஒரு நாளான அந்த திருநாள் தான், "கருட சேவை' விழாவாக கொண்டாடப்படுகிறது.

பெருமாள் தனக்கு பிடித்தமான கருட வாகனத்தில், பிடித்த நகைகளை எல்லாம் அணிந்து வருவதால், மூலவரே தங்களை நேரில் காண வருவதாக கருதி, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அன்றைய தினம் திருமலையில் திரள்வர்.
நன்றி:தினமலர்.

Sunday, October 2, 2011

சனிபகவான் என்ன செய்வார்.

யாரை வாழ வைப்பார்

சனிபகவான் என்ன செய்வார்.

பால ஜோதிடம் இதழ் 01-10-2011 

Balajothidam pdf.

    

இங்கு கிளிக் செய்து டவுன்லோடு செய்யவும்.

Saturday, September 24, 2011

பெருமாளின் புண்ணிய ஆன்மீக புரட்டாசி மாதம்.

மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை.  
சமஸ்கிருதத்தில், "பாத்ரபதம்' எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.


இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எம தர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்' என்பர்; "பட்சம்' என்றால், "15 நாட்கள்' எனப் பொருள்.

இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோதசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் செப்., 27) மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும்.

ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டாசியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனைத் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மாதமாக இருக்கிறது. தென்மேற்கு திசையை, "கன்னி மூலை' என்பர். இதனால் தான், கோவில்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். இவரை, "கன்னி மூலை கணபதி' என்பர். சபரிமலை செல்லும் பக்தர்கள், பம்பையில் உள்ள கன்னி மூலை கணபதி கோவிலைத் தரிசித்த பிறகே மலையேறுகின்றனர். ஏதாவது வேண்டுதல் வைத்து, மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும்.

நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும். அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண்டில் அக்.,10) அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் (செப்., 24, அக்., 1, 8, 15) பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு செப்., 28 - அக்., 5) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையா கவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி யாகவும் வழிபடு கிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகிய வற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும். இந்நேரத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பது சிறப்பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடு கின்றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில்களில், "பாரிவேட்டை' எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.

முருகனுக்கும் இம்மாதத்தில் விழா <உண்டு. திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பாலபிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர்ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நடக்கும். அங்குள்ள காசி விஸ்வநாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம், ஆன்மிக மாதம். இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.



Wednesday, September 21, 2011

ராகு பகவான் வழிபாடு. திருமண தடை நீங்குமா?

     ராகு பகவான் வழிபாடு. திருமண தடை நீங்குமா?
நன்றி:மாலைமலர்.

Saturday, September 17, 2011

குமுதம் ஜோதிடம் 23-09-2011 Kumudam Jothidam


 

குமுதம் ஜோதிடம் 23-09-2011 Kumudam Jothidam

 

Monday, September 12, 2011

ஆசையினால் வரும் துன்பம் -ஆதிசங்கரர்


 நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.

 அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

 உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.

 காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.

 பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.

-ஆதிசங்கரர்