Tuesday, May 10, 2011

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்!



தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. 

செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். 

செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. 

தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. 

கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். 

கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.

நிலம் வழங்கும் கிரகம்: 

பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும்.

 இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகும். 

பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். 

பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்று பாடுகிறார்.

 செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.

ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே  நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.

 ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது.

 செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 

1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது. 2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது.

 இந்த நாட்களில் பொன், பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை.

 இன்னும் சொல்லப்போனால், செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.
தினமலர்


Monday, May 2, 2011

சனிவார விரதம் இருக்கும் முறைகள்.


காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் திருஉருவப்படம் அல்லது திருஉருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.
விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை ஆவாஹனம் செய்ய வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம்.
பின்தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க  வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப்படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். இதுவே சனி வார விரதம் எனப்படும்.
* ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் பூரண உபவாசம் இருந்து காகத்திற்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.
* ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் ஒருவேளை உணவோடு விரதம் இருந்து, சனிபகவானின் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
* சிறிது எள்ளை பொட்டலமாக கட்டிக்கொள்ள வேண்டும். தினசரி இரவு படுக்கும்போது, அதை தலைக்கு அடியில் வைத்து படுக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னம் இடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் என்று இந்த பரிகாரத்தை சனிதோஷத்தின் தீவிரத்தைப் பொறுத்து செய்ய வேண்டும்.
* ஒரு முழுத் தேங்காயை சனிபகவான் சன்னதியில் சனிக்கிழமை அன்று இரண்டு பகுதியாக்கி, அதில் நல்லெண்ணை விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம். அல்லது, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
* சனிபகவானுக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து, கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடை மாலை செய்து வழிபாடு செய்து, அவற்றை அன்னதானம் செய்ய வேண்டும்.
* சனிபகவனுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகளை சிறப்போடு செய்யலாம். அதைத் தொடர்ந்து மண்டல பூஜை செய்தும் பயன் பெறலாம்.
* எள்ளை சுத்தம் செய்து வறுத்து, வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்ந்து இடித்து திலசூரணம் செய்து கொள்ள வேண்டும். அதை வெங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
* ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி ஆகியோரையும் சனிதோஷம் விலக ஆராதனை செய்யலாம்.
* அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ அர்ச்சனைகள் செய்வது மிகவும் நல்லது.
* தினசரி நவக்கிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். - இந்த பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றை, சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்து வந்தால், அந்த தோஷத்தில் இருந்து எளிதில் விடுபட்டு விடலாம்.