Saturday, February 5, 2011

ஸ்ரீசந்திரசேகரேந்திரஸ்வாமிகள் அருள்வாக்கு.


பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ‘ஹா ஹா’ என்று தாஹம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது. அங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல்நீர் என்பது. ப்ரதிபிம்பம் (reflection), ஒளிச்சிதறல் (refraction) ‘தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் இலேசாகி விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரி யும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும்.

 இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும், ஸம்ஸ்க்ருதத்தில் ‘ம்ருக்’ என்றால் ‘தேடுவது’ என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் ‘ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது!லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ‘அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால், ‘கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா ? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்’ என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்